கனடாவின் மனிடோபா Manitoba மாகாணத்தில் உள்ள Leaf Rapids என்ற சிறிய நகரம், போதிய அத்தியாவசிய வளங்களின்றி மிக மோசமான “நெருக்கடி நிலையில்” (State of crisis) தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இங்கு அதிகரித்துள்ள வன்முறைகள் மற்றும் குற்றச்செயல்களுக்கு மத்தியில், மாகாண மற்றும் மத்திய அரசுகளின் அவசர உதவியை நாடி மக்கள் திறந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
சுமார் 250 மக்கள் வாழும் இந்த Leaf Rapids நகரில், அண்மை வாரங்களாக திருட்டு, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் 21 வயது இளைஞர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக Lianna Anderson தெரிவித்தார். இதன்காரணமாக மேலதிக RCMP பொலிஸாரும், மோப்ப நாய் பிரிவினரும் அங்கு பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்ளதாக Supt. Chris Massart தெரிவித்துள்ளார்.
1970களில் சுரங்கத் தொழிலால் செழித்தோங்கிய இந்நகரம், 2002இல் சுரங்கம் மூடப்பட்ட பின் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
2013ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, சுத்தமான குடிநீர் இன்றி Manitoba மாகாணத்திலேயே மிக நீண்ட காலமாக ‘தண்ணீரைக் காய்ச்சி குடிக்கும்’ (Boil-water advisory) அவல நிலை இங்கு நீடிக்கிறது.
அத்துடன், பகுதி நேரமாக இயங்கும் சுகாதார நிலையம் மற்றும் மூடப்படும் அபாயத்தில் உள்ள ஒரேயொரு மளிகைக் கடையால் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு மாகாண அரசு இந்நகரத்தின் மேயர் மற்றும் சபைக்கான அதிகாரத்தைக் கலைத்து, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இதனால் தங்களுக்கு ஆதரவாகப் பேச உள்ளூர் தலைவர்கள் யாரும் இல்லை என Raymond Meunier மற்றும் முன்னாள் மேயர் Ervin Bighetty ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி 10 அவசர கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மக்கள் அனுப்பியுள்ளனர்.
எவ்வாறெனினும், உட்கட்டமைப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக $590,000 நிதியை ஒதுக்கியுள்ளதாக மாகாண அமைச்சர் Glen Simard இன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த அறிவிப்பினை உள்ளூர் மக்கள் கடுமையாக நிராகரித்துள்ளதுடன், இது பழங்குடியின மக்கள் வாழும் பகுதி என்பதால் அரசுகள் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாக மனித உரிமை ஆர்வலர் Hilda Anderson-Pyrz சுட்டிக்காட்டியுள்ளார்.










