றொரண்டோ யூத வழிபாட்டுத் தல துப்பாக்கிச் சூடு – இரண்டாவது பதின்ம வயது இளைஞர் கைது

கனடாவின் றொரண்டோ (Toronto) மற்றும் வோன் (Vaughan) பகுதிகளில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களை (Synagogues) இலக்கு வைத்து கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக, 17 வயதுடைய இரண்டாவது சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 6 மற்றும் 7ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு வேளையில் இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

இதன்போது, வெறும் 20 நிமிட இடைவெளியில் தோர்ன்ஹில் (Thornhill) பகுதியில் உள்ள ‘பெத் அவ்ரஹாம் யோசெப்’ (Beth Avraham Yosef) வழிபாட்டுத் தலம் மற்றும் றொரண்டோவின் பாத்தர்ஸ்ட் வீதி (Bathurst Street) – கிளென்கேர்ன் அவென்யூ (Glencairn Avenue) சந்திப்புக்கு அருகில் உள்ள மற்றொரு வழிபாட்டுத் தலம் ஆகியன மீது இந்தத் துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்விபத்துகளில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இருந்த போதிலும், இரண்டு வழிபாட்டுத் தலங்களின் நுழைவாயில்களிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தோர்ன்ஹில் வழிபாட்டுத் தலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது, அதற்குள் இருவர் இருந்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் 17 வயதுடைய (தற்போது 18 வயது) முதலாம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் தனியாகச் செயற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்த பொலிஸார், தீவிர தேடுதலின் பின்னர் இந்த வார தொடக்கத்தில் வாட்டர்லூ (Waterloo) பகுதியில் வைத்து இரண்டாவது சந்தேக நபரை யார்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) கைது செய்துள்ளனர்.

இளம்பிராய குற்றவியல் நீதிச் சட்டத்தின் (Youth Criminal Justice Act) கீழ் பெயர் விபரங்கள் வெளியிடப்படாத இந்த 17 வயது இளைஞர் மீது, ஆபத்தான முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்தியமை உட்பட ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles