பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையின் போது நூதன முறையில் மோசடி செய்த 38 வயதுடைய ருமேனிய பிரஜை ஒருவரை டர்ஹாம் பிராந்திய (Durham Region) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி, அக்ஸ்பிரிட்ஜ் (Uxbridge) பகுதியில் Facebook Marketplace ஊடாக வாகனம் ஒன்றை வாங்க வந்த நபர், உரிமையாளரின் கவனத்தைத் திசைதிருப்பி வாகனத்தின் எஞ்சின் மீது ஒயிலை (Engine Oil) ஊற்றியுள்ளார்.
பின்னர் எஞ்சின் பழுதடைந்துள்ளதாகக் கூறி, மிகக்குறைந்த விலைக்கு அந்த வாகனத்தை வாங்கியுள்ளார்.
மே 1 ஆம் திகதி, அதே வாகனம் மீண்டும் அதிக விலைக்கு விற்பனைக்காகப் பதிவேற்றப்பட்டதை பொலிஸார் கவனித்தனர்.
அதில் வாகனத்தின் மைலேஜ் அளவும் பாதியாகக் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மோகோஸ் கான்ஸ்டன்டின் (Mogos Constantin) என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது ஏழு மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர் கேட்டலின் அயோனாஸ்கு (Catalin Ionascu) என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.
இவர் ருமேனிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலுடன் (Romanian Organized Crime) தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023 இல் இதேபோன்ற வாகன மோசடிகள், ஆயுதமேந்திய கார் கடத்தல்கள் மற்றும் ஆசிய, இந்திய சமூகத்தின் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திய குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்.
அமெரிக்காவின் சான் ஜோஸ் (San Jose) பொலிஸாராலும் இவர் பல வழக்குகளுக்காகத் தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சமூக வலைதள விற்பனைகளின் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
