கனடாவின் தெசலோன் (Thessalon) பகுதியில் சிறுவன் ஒருவனைக் கடத்திய குற்றத்திற்காக மனோஜ் கோவிந்தபாலுநிகம் (Manoj Govindbalunikam) என்ற 37 வயது நபருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆகஸ்ட் 15 அன்று, மஞ்சள் நிற செவ்ரோலெட் கமெரோ (Chevrolet Camaro) காரில் வந்த மனோஜ், ஒரு சிறுவனுக்கு பொம்மை மற்றும் ஐஸ்கிரீம் வழங்கி, தனது காரில் ஏற்றியுள்ளார்.
சிறுவன் தனது வீட்டு முகவரியைச் சொல்லியும், வீட்டைத் தாண்டியும் காரை நிறுத்தாமல் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறுவனின் தந்தை காரை வழிமறித்துத் தனது மகனை மீட்டெடுத்தார்.
அடுத்த நாள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மனோஜின் கைபேசியில், அந்தச் சிறுவனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கண்டெடுக்கப்பட்டன.
தனது செயலை ஒரு ‘கலாச்சாரத் தவறு‘ (Cultural Misunderstanding) என்று மனோஜ் வாதிட்டார்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கனடாவில் வசிக்கும் ஒருவர் இத்தகைய செயலை அப்பாவித்தனமான தவறு என்று கூறுவதை ஏற்க முடியாது என நீதிபதி மைக்கேல் என். வர்பியோ (Michael N. Varpio) நிராகரித்தார்.
கனடிய சட்டப்படி, 6 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெறும் புலம்பெயர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது.
மனோஜிற்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், தண்டனைக்காலம் முடிந்ததும் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனோஜ் கோவிந்தபாலுநிகம் இந்தியாவில் விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering) பட்டமும், றொரண்டோ பல்கலைக்கழகத்தில் (University of Toronto) முதுகலை பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
