வாட்டர்லூ (Waterloo) நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற செயின்ட் பேட்ரிக் தினக் கொண்டாட்டங்களின் போது, கட்டிடத்தின் உச்சிப் பகுதியில் ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கி ஏந்திய பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டிருந்தமை பொதுமக்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள வாட்டர்லூ பிராந்திய பொலிஸ் சேவை (WRPS) மற்றும் பாதுகாப்புத்துறை நிபுணர் Scott Blandford, இது ஒரு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர்.
மதுபானம் மற்றும் பெருமளவிலான மக்கள் கூடும் இத்தகைய நிகழ்வுகளில், ஏதேனும் வன்முறைகளோ அல்லது பயங்கரவாத அச்சுறுத்தல்களோ ஏற்படாமல் தடுக்கவும், கூட்டத்தை மேலிருந்து கண்காணிக்கவும் இவ்வாறான ‘ஓவர் வாட்ச்’ (Over-watch) முறைகள் அவசியமானவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர், பாதுகாப்பை விட இது ஒரு அச்சுறுத்தல் போலவே தங்களுக்குத் தெரிந்ததாக வேதனை தெரிவித்துள்ளனர்.
வாட்டர்லூ மேயர் Dorothy McCabe அவர்களும் இந்த நடவடிக்கையை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், முன்கூட்டியே தமக்கு இது பற்றித் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
அண்மைக்கால உலகளாவிய வன்முறைச் சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, மிக மோசமான சூழலை (Worst-case scenario) எதிர்கொள்ளும் திட்டமிடலுடனேயே தாம் செயற்பட்டதாக பொலிஸ் தரப்பு நியாயப்படுத்தியுள்ளது.










