கனடா, ஸ்காபரோ மார்க்கம் அன்ட் ஸ்டீல்ஸ் சந்திப்பில் அமைந்துள்ள நியு ரங்கனாஸ் நகையகத்தில் கொள்ளை முயற்சியொன்று நடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நண்பகல் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
நகையகத்திற்கான நகைகளை கொள்வனவு செய்துகொண்டு, வாகனத்தில் வந்து வாசலில் இறங்கிய போது அங்கு சூழ்ந்திருந்த கொள்ளையர்கள் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளதை அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்களில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
உரிமையாளர் ரங்கன், நகைகளைக் கொள்வனவு செய்துகொண்டு குறித்த நேரத்தில் நகையகத்திற்கு வருவதை நன்கு அறிந்தவர்களினால் இந்தக் கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டிருக்கவோ அல்லது கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்திருக்கவோ வேண்டும் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
உரிமையாளர் ரங்கன் குறித்த இடத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கொள்ளையர்கள் அங்கு வந்து தயார் நிலையில் இருப்பது கமராக்களில் பதிவாகியுள்ளது. வாகனத்தைவிட்டு இறங்கிய சந்தர்ப்பத்தில், கொள்ளையர்கள் நகைகளைப் பறித்துச் செல்ல முற்பட்ட போது கொள்ளையருடன் நகையக உரிமையாளர் துணிச்சலுடன் போராடிய காட்சிகளும் பதிவாகியுள்ளன.
உடனடியாக அங்கு வந்த பொலிசார் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சுற்றுவட்டாரத்தில் இருந்த வாகனங்களை சோதனையிட்டதுடன், பலரிடம் விசாரித்துள்ளனர். இதன்போது எவ்வளவு பெறுமதியான நகைகள் கொண்டுவரப்பட்டது என்ற உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ரங்கனாஸ் உரிமையாளர் ரங்கன், வெறுமனே நகையக உரிமையாளராக மட்டுமன்றி தாயக மக்களுக்கு பல்வேறு வழிகளில் மிக நீண்டகாலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.
மிகப் பாதுகாப்பாக நகையகம் அமைக்கப்பட்டுள்ளதால், வெளியே இருந்து இந்தக் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
எனினும், நகையத்திற்கு வரும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளைத் தேவையில்லை என்றும் ரங்கனாஸ் நகையகத்தில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம், தமிழ் நகையக உரிமையாளர்களிடம் பெரும் அச்சத்தையும் கவலைகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது என்றும் தெரியவருகிறது.










