கனடாவின் மத்திய ஒன்டாரியோ மற்றும் பாரி (Barrie) பகுதிகளில் புதன்கிழமை அன்று வீசிய கடுமையான இடிமின்னலுடன் கூடிய புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
மின் விநியோக நிறுவனங்களான ‘அலெக்ட்ரா யூட்டிலிட்டிஸ்’ (Alectra Utilities) மற்றும் ‘ஹைட்ரோ ஒன்’ (Hydro One) வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, பாரி நகரில் மட்டும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கடுமையான மின் தடையால் பாதிக்கப்பட்டன.
புயலின் வீரியம் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடும், கிளைகள் முறிந்தும் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து மற்றும் மின்சாரக் கம்பிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த இயற்கை சீற்றத்தால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
பாரி நகரைத் தாண்டி ஒன்டாரியோவின் மத்திய பிராந்தியம் முழுவதும் இந்த மின் தடை பரவலாகப் பாதிப்பை ஏற்படுத்தியது. ஹைட்ரோ ஒன் நிறுவனத்தின் தரவுகளின்படி, நியூமார்க்கெட், கௌசிச்சிங் Couchiching, ஒரிலியாவில் Orillia. ஹன்ட்ஸ்வில் Huntsville, பேரி சவுண்ட்Parry Sound, ஆரஞ்சுவில்Orangeville, பிரேஸ்பிரிட்ஜ் Bracebridge ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த திடீர் இடிமின்னல் புயல் தாக்கியுள்ளதால், மின்சாரம் இல்லாத வீடுகளில் குளிர்சாதன வசதியின்றி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு வரை நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










