மிசிசாகா (Mississauga) பகுதியில் தனது வயதான பெற்றோரை படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் 46 வயது நபர், றொரண்டோ (Toronto) நகரில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) எச்சரித்துள்ளனர்.
ஜோர்டான் சாங்வின் (Jordan Sangwin) என்ற இந்த சந்தேக நபர், கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் றொரண்டோவின் ஹை பார்க் (High Park) பகுதிக்கு அருகில் கடைசியாகப் பார்க்கப்பட்டதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அவர் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது புதிய புகைப்படங்கள் மற்றும் அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சாம்பல் நிற நீண்ட கை சட்டை மற்றும் கறுப்பு நிற அரைகாற்சட்டை (Shorts) அணிந்து, கறுப்பு நிற டபிள் பேக் (Duffle bag) ஒன்றை அவர் ஏந்திச் செல்வதாக விவரிக்கப்பட்டுள்ளது.
அவர் ஆபத்தானவர் என்பதால், பொது மக்கள் யாரும் அவரை நெருங்க வேண்டாம் என்றும், கண்டால் உடனடியாக 911 என்ற அவசர எண்ணுக்கு அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 18 அன்று மிசிசாகாவின் லேக்ஷோர் ரோடு ஈஸ்ட் (Lakeshore Road East) மற்றும் ஹுரொன்டாரியோ ஸ்ட்ரீட் (Hurontario Street) பகுதிக்கு அருகில் உள்ள வீட்டில், தனது பெற்றோரைக் கொன்றதாக ஜோர்டான் (Jordan) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
