நோர்த் யார்க் துப்பாக்கிச்சூடு – பலியானவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் விபரம் வெளியீடு!

நோர்த் யார்க்கில் (North York) கடந்த வாரம் இடம்பெற்ற பகல் நேரத் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர் மற்றும் கைது செய்யப்பட்டவர் குறித்த விபரங்களைத் றொரண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி நண்பகல் 12:30 மணியளவில், கிளென் பார்க் (Glen Park) பகுதியில் உள்ள வெண்டர்லி பூங்கா (Wenderley Park) அருகே இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பலமுறை சுடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபர், ரொறன்ரோவைச் சேர்ந்த 47 வயதுடைய டேனியல் ஸ்டோப்னிக்கி (Daniel Stopnicki) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இந்த ஆண்டில் ரொறன்ரோவில் கொல்லப்பட்ட ஏழாவது நபர் ஆவார்.

இக்கொலை தொடர்பாக 67 வயதுடைய மைக்கலோ மார்கிசெவிக் (Michaelo Markicevic) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது ஒரு தனிப்பட்ட ரீதியிலான சம்பவம் என்றும், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் 416-808-7400 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கைது செய்யப்பட்ட நபர் மே 1 ஆம் திகதி பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Articles

Latest Articles