தற்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று, கொவிட் தொற்றை விட வீரியமானது என்று கூறப்படுவது குறித்து தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி (Dr. Kumarasamy) விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, ஹன்டா வைரஸ் என்பது எலி, பெருச்சாளி போன்ற ரோடன்ட்ஸ் (Rodents) இனங்களின் உமிழ்நீர், சிறுநீர் மற்றும் மலம் மூலம் பரவுகிறது.
இவை மனிதர்களின் உடலில் பட்டாலோ அல்லது உணவில் கலந்தாலோ தொற்று ஏற்படும். மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிதானது என வைத்தியர் கூறுகிறார்.
ஆரம்பத்தில் காய்ச்சல், கடுமையான உடல்வலி, தலைவலி மற்றும் வயிற்றுவலி ஏற்படும்.
இதன் தீவிரம் அதிகரித்தால் மூச்சுத்திணறல் (Hantavirus Cardiopulmonary Syndrome) அல்லது சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படலாம்.
முறையான சிகிச்சை அளிக்காத பட்சத்தில், இந்தத் தொற்றினால் 30 முதல் 50 சதவீதம் வரை உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இது கொவிட் தொற்றை விடத் தீவிரமானது என்று மருத்துவர் எச்சரிக்கிறார்.
இதற்கெனத் தனியான தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ கிடையாது.
சப்போர்ட்டிவ் (Supportive Care) சிகிச்சைகள் மட்டுமே தற்போது வழங்கப்படுகின்றன.
ஆர்டி-பிசிஆர் (RT-PCR) சோதனை மூலம் இத்தொற்றை உறுதி செய்யலாம்.
எலிகள் நடமாட்டம் உள்ள இடங்களைத் தவிர்ப்பதும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதே மிகச்சிறந்த வழி.
குறிப்பாகத் துப்புரவுப் பணியாளர்கள் கையுறைகளை (Gloves) அணிந்து பணிபுரிய வேண்டும்.
அர்ஜென்டினா (Argentina) போன்ற நாடுகளில் எலிகள் மூலம் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், இடப்பெயர்வு மூலம் மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் கனடாவில் உலகளாவிய ஹன்டா வைரஸ் (Hantavirus) பரவல் எதிரொலியாக, ஒண்டாரியோவில் (Ontario) மேலும் ஏழு பேரைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாகாண சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
ஒண்டாரியோவில் ஏற்கனவே ‘அதிக ஆபத்துள்ள’ பிரிவில் மூவர் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ‘குறைந்த ஆபத்துள்ள’ பிரிவில் மேலும் எழுவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஒண்டாரியோவில் கண்காணிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் ஆல்பர்ட்டா (Alberta) மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணங்களிலும் அறுவர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
ஒண்டாரியோவின் கிரே புரூஸ் (Grey Bruce) மற்றும் பீல் பிராந்தியத்தைச் (Peel Region) சேர்ந்தவர்கள், ஹன்டா வைரஸால் உயிரிழந்த ஒரு பயணியுடன் விமானத்தில் பயணம் செய்ததால் ‘அதிக ஆபத்துள்ள’ நபர்களாகக் கருதப்படுகின்றனர். இதுவரை அவர்கள் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை.
ஏப்ரல் 1, 2026 முதல் MV Hondius கப்பலில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் கனடாவுக்குள் நுழைவதைத் தடுக்க மத்திய அரசு தற்காலிக நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உலக அளவில் இதுவரை 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3 மரணங்கள் பதிவாகியுள்ளன.
எனினும், உலகளாவிய ரீதியில் இந்த வைரஸால் ஏற்படும் ஆபத்து இன்னும் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆறுதல் தெரிவித்துள்ளது.










