குடிபோதையில் விபத்து – மூன்று சிறுவர்கள் உயிரிழந்த வழக்கில் இளைஞனுக்கு 8 ஆண்டுகள் சிறை!

கடந்த ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான இளைஞனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈதன் லெஹுல்லியர் (Ethan Lehouillier) என்ற 20 வயது இளைஞனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, ஏற்கனவே அவர் சிறையில் இருந்த காலத்தைக் கழித்து, தற்போது 6.5 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க வேண்டும்.

2025 மே மாதம், ஈதன் அதிவேகமாக (மணிக்கு 170 கி.மீ) வாகனம் ஓட்டி வந்து, சிக்னலை மீறிச் சென்று ஒரு வானின் மீது மோதினார்.

அப்போது அவரது இரத்தத்தில் இருந்த மதுவின் அளவு சட்டபூர்வ எல்லையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.

இந்த விபத்தில் 15 வயது ரமோன் லாவினா (Ramone Lavina), 13 வயது ஜேஸ் (Jace) மற்றும் 6 வயது மியா (Mya) ஆகிய மூன்று உடன்பிறந்தவர்கள் உயிரிழந்தனர்.

அவர்களது தாயார் ஜேட் கால்வே (Jade Galve) மற்றும் குடும்பத்தினர் படுகாயமடைந்தனர்.

சிறைத்தண்டனை தவிர, ஈதன் 20 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தனது டிஎன்ஏ (DNA) மாதிரியை அதிகாரிகளிடம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தாய் ஜேட் கால்வே (Jade Galve), தனது மூன்று பிள்ளைகளை இழந்ததற்கு 8 ஆண்டுகள் சிறை என்பது மிகக்குறைவான தண்டனை என்றும், அவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.

இத்தகைய துயரங்கள் இனி நிகழாமல் இருக்க, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles