கனடாவின் கல்கரி (Calgary) நகரில் தந்தை ஒருவரே தனது இரு குழந்தைகளைக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
37 வயதுடைய தந்தை ஒருவர், தனது ஐந்து வயது மகன் மற்றும் மூன்று வயது மகளை புதன்கிழமை நள்ளிரவில் கொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
10 மணிநேரத்திற்குப் பிறகு, அவரே 911 என்ற எண்ணிற்கு அழைத்து குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், குழந்தைகளின் சடலங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வந்துள்ளார்.
பொலிஸாரின் அறிவுறுத்தலின்படி வாகனத்தை விட்டு வெளியே வந்த அவரை, கல்கரி பொலிஸார் (Calgary Police Service) கைது செய்தனர்.
அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரும் குழந்தைகளின் தாயும் சுமார் ஓராண்டுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு இடையே ஏற்கனவே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நான்கு முறை பொலிஸார் தலையிட்டுள்ளனர்.
ஆனால் இதுவரை வன்முறைச் சம்பவங்களோ அல்லது குற்றச்சாட்டுகளோ பதிவு செய்யப்படவில்லை.
குழந்தைகள் உரிய நேரத்தில் வீடு திரும்பாததால் தாய் பொலிஸாரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
எனினும், மறுநாள் காலை பொலிஸார் இந்தத் துயரமான செய்தியை அவரிடம் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் உறவினர்கள் எவருமின்றி தனியாகக் குழந்தைகளை வளர்த்து வந்த அவருக்கு இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குடும்பம் எரித்திரிய (Eritrean) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், புனித மைக்கேல் எரித்திரிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் (St. Michael Eritrean Orthodox Church) அந்த சமூகத்தினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மீண்டும் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்படும் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக உயிரிழந்த குழந்தைகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது
