கனடா மத்திய அரசு அதிரடி – இன்று முதல் உயர் அதிகாரிகள் அனைவரும் அலுவலகம் திரும்புகின்றனர்!

கனடா மத்திய அரசுப் பணியில் உள்ள உயர் அதிகாரிகள் (Executives) அனைவரும் இன்று முதல் வாரம் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என்ற புதிய உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

திறைசேரி சபை (Treasury Board) அறிவித்துள்ள இந்த மாற்றத்தின்படி, இன்று முதல் உயர் அதிகாரிகள் முழுநேரமாக அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்.

ஏனைய ஊழியர்கள் வரும் ஜூலை 6 ஆம் திகதி முதல் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகம் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு முதன்மையாகத் திறைசேரி சபையின் கீழ் உள்ள முக்கிய துறைகளுக்குப் பொருந்தும்.

எனினும், கனடா வருவாய் முகமை (Canada Revenue Agency) மற்றும் தேசிய ஆராய்ச்சி சபை (National Research Council) போன்ற அமைப்புகளும் இதே நடைமுறையைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டு தொற்றுநோய் காலத்தில் தொலைதூரப் பணி (Remote work) அறிமுகமானது.

பின்னர் 2024 செப்டம்பரில் வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகப் பணி என அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்தத் திடீர் உத்தரவிற்கு ஊழியர் சங்கங்கள் (Federal unions) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாகச் சில சங்கங்கள் முறையற்ற தொழிலாளர் நடைமுறைப் புகார்களையும் பதிவு செய்துள்ளன.

2025 மார்ச் மாத நிலவரப்படி, மொத்தமுள்ள 357,965 பொதுப் பணியாளர்களில் 9,340 பேர் உயர் அதிகாரிகள் (Executives) என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பணிகளின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles