கனடாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் படையைக் கட்டமைப்பதற்காக ஜெர்மனியின் டி.கே.எம்.எஸ் (TKMS – ThyssenKrupp Marine Systems) நிறுவனம் முதன்மை விநியோகஸ்தராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
இதன்படி, மொத்தம் 12 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களில் முதல் நான்கு கப்பல்கள் 2034 ஆம் ஆண்டிற்குள் கனடாவுக்கு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிபாக்ஸ் (Halifax) நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பழுதடைந்த 4 விக்டோரியா கிளாஸ் (Victoria-class) நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக இவை கொள்வனவு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இந்த மாபெரும் பாதுகாப்புத் திட்டத்தின் மதிப்பு 100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் கனடாவில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நேட்டோ (NATO) அமைப்பில் உள்ள நாடுகளுடன் இணைந்து செயல்படும் தொழில்நுட்ப வசதி மற்றும் ஆர்க்டிக் (Arctic) கடல் பகுதிக்கு ஏற்ற வடிவமைப்பு ஆகிய காரணங்களால், தென் கொரியாவின் ஹன்வா (Hanwha) நிறுவனத்தை விட ஜெர்மனியின் டி.கே.எம்.எஸ் (TKMS) நிறுவனம் முன்னணியில் உள்ளது.
ஜெர்மனி மற்றும் நார்வே (Norway) நாடுகளுக்கான முன்பதிவுகளில் இருந்து சில கப்பல்களை கனடாவுக்கு முன்னதாகவே வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான இறுதி பேச்சுவார்த்தைகள் அடுத்த 6 முதல் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.










