ஒன்ராறியோவின் புராக்வில் (Brockville) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் கார்டியர் கோர்ட் (Cartier Court) பகுதியில் உள்ள வீட்டிலிருந்து 911 அவசர அழைப்பு கிடைத்துள்ளது.
அங்கு சென்ற பொலிஸார், மூன்று பேர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுச் சிறுவன் ஒருவன், நகரின் வெளிப்பகுதியில் உள்ள ஒரு முகவரியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
குறித்த சிறுவன் மீது மூன்று முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களுக்கும் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தற்செயலாக நடந்த தாக்குதல் அல்ல என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் இன்று வெள்ளிக்கிழமை பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அவரது வயது காரணமாக அடையாளங்கள் சட்டப்படி பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து புராக்வில் பொலிஸார் (Brockville Police Service) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பொதுமக்கள் தமது அனுதாபங்களை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
