கனடாவின் வாசாகா பீச் (Wasaga Beach) பகுதியில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற எல்னாஸ் ஹஜ்தாமிரி (Elnaz Hajtamiri) கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியான முகமது லிலோ (Mohamad Lilo) மீதான கொலைக் குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
38 வயதான முகமது லிலோ (Mohamad Lilo), எல்னாஸைக் கடத்த சதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதற்காக அரசுத் தரப்பு அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யச் சம்மதித்ததுடன், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க நீதிபதி மிச்செல் பர்ஸ்ட் (Justice Michelle Furst) ஒப்புதல் அளித்தார்.
2022 ஜனவரியில், பொலிஸார் போல வேடமிட்ட மூவர் எல்னாஸைக் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட எல்னாஸ் இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லை; அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
எல்னாஸ் தன்னைப் பிரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத லிலோ, அவரைப் பின்தொடர்ந்து துன்புறுத்திக் கும்பல் ஒன்றின் மூலம் கடத்தத் திட்டமிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருடப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்யும் லிலோவின் சட்டவிரோதச் செயல்கள் எல்னாஸுக்குத் தெரியும் என்பதால், அவர் பொலிஸாரிடம் சென்றுவிடுவார் என்ற அச்சமும் இக்கடத்தலுக்கு ஒரு காரணமாக அமைந்தாக கூறப்படுகிறது.
லிலோவுக்கு எந்த இரக்கமும் இல்லை என்றும், அவர் ஒருபோதும் திருந்த மாட்டார் என்றும் எல்னாஸின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் கண்ணீருடன் தெரிவித்தனர்.
“நீ எல்னாஸைக் கட்டுப்படுத்த நினைத்தாய், ஆனால் அதில் தோல்வியடைந்தாய்” என அவர்கள் லிலோவைச் சாடினர்.
எல்னாஸ் மீது கடந்த காலத்தில் இரும்புக் கரண்டியால் (Frying pan) தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக, லிலோ ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தையே தண்டனையாகக் கொண்டு விடுவிக்கப்பட்டார்.
எல்னாஸின் 42வது பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










