ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) முழு ஆதரவு அளித்தார்.
பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமை தொடர்பாக தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா ஈரான் மீது போரைத் தொடங்கியபோது, அதற்கு பிரதமர் கார்னி (Carney) அதற்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
எனினும், சில நாட்களுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபையைக் கலந்தாலோசிக்காமல் அமெரிக்கா எடுத்த இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டங்களை மீறுவதாக அமையக்கூடும் என அவர் கவலை வெளியிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) போர் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் ஆரம்பத்தில் தெளிவாக இல்லை என்றும், அவை காலப்போக்கில் மாற்றமடைந்ததாலேயே கனடாவின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டதாகவும் கார்னி (Carney) குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்தத் திடீர் நிலைப்பாட்டு மாற்றத்திற்குப் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவர் தனது கொள்கையில் உறுதியாக இல்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடா இதுவரை இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்கவில்லை.
இருப்பினும், ஒரு நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்பட்டால், ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கார்னி (Carney) இந்த வார இறுதியில் ஆர்மீனியாவில் (Armenia) நடைபெறும் ஐரோப்பிய அரசியல் சமூக உச்சிமாநாட்டில் (European Political Community summit) கலந்துகொள்ள உள்ளார்.
அங்கு போர்நிறுத்தத்திற்குப் பின்னரான உதவிகள் குறித்து அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்க வேண்டும் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் போன்ற அமெரிக்காவின் இலக்குகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அதனைச் சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டே செய்ய வேண்டும் என்பதிலும் கார்னி (Carney) உறுதியாக உள்ளார்.
