அட்லாண்டிக் கடலில் சுற்றுலா கப்பலில் வைரஸ் பரவல் – 3 பேர் பலி!

அட்லாண்டிக் கடலில் பயணம் செய்துகொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்றில், அரிய வகை ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்று பரவியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளன.

அர்ஜென்டினாவிலிருந்து (Argentina) புறப்பட்ட MV Hondius என்ற கப்பலில் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பயணித்த முதிய தம்பதியினர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் ஒருவருக்கு ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் அறிகுறிகளுடன் கப்பலில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹண்டாவைரஸ் பொதுவாக எலி போன்ற கிருமி ஊர்திகளின் சிறுநீர் அல்லது கழிவுகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.

இது நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடியது. மனிதர்களுக்கிடையேயும் இது பரவக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இக்கப்பல் கேப் வேர்ட் (Cape Verde) தீவு அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அங்கிருக்கும் உள்ளூர் அதிகாரிகள் நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்.

கப்பலில் இருந்த சுமார் 150 சுற்றுலாப் பயணிகளில் எவருக்கும் இன்னும் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த வைரஸின் மரபணு வரிசைமுறை மற்றும் தொற்று பரவிய விதம் குறித்து உலக சுகாதார நிறுவனம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஹண்டாவைரஸ் தொற்றுக்கு என பிரத்யேக சிகிச்சைகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லை என்பதால், ஆரம்பக்கால மருத்துவ கவனிப்பு மட்டுமே உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Latest Articles