றொரண்டோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (GTA) உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில், ‘ஸ்மார்ட்‘ கண்ணாடிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட கும்பலை டொராண்டோ பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இக்கும்பல் விற்பனை நிலைய ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அவர்கள் கணினியில் உள்ளீடு செய்யும் கடவுச்சொற்களை (Passwords) ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் இரகசியமாகப் படம்பிடித்துள்ளனர்.
திருடப்பட்ட இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, கடைகளின் கணினி அமைப்பிற்குள் நுழைந்து, சுய-செக்அவுட் (Self-checkout) இயந்திரங்கள் மூலம் கிப்ட் கார்டுகளில் (Gift cards) சட்டவிரோதமாகப் பணத்தை ஏற்றியுள்ளனர்.
இதன் மூலம் வர்த்தக நிறுவனங்களுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக Lord Jeffrey Gelera, Ronald Herrera Reyes, Paul Herron Paje, Vince Villaluz மற்றும் Nixcel Gamayon ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 49 வயதுடைய Danibros Flores மற்றும் 41 வயதுடைய Remfrance Jusi ஆகிய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இவர்களில் ஒருவருக்கு எதிராக கனடா தழுவிய பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன மோசடித் திட்டம் தொடர்பாக சுமார் 112 சம்பவங்களை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது போன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் இருப்பின் உடனடியாக பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.










