றொரண்டோவின் ஹய் பார்க் (High Park) பகுதியில் உள்ள செர்ரி மலர்கள் (Cherry Blossoms) இம்மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் மலரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மலர்களின் வளர்ச்சியை அவதானித்து வரும் ஸ்டீவன் ஜோனியாக் (Steven Joniak) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வானிலை சீராக இருந்தால், ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் முழுமையான பூரிப்பை (Peak Bloom) காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செர்ரி மலர்கள் மொட்டிலிருந்து மலர்வது வரை மொத்தம் ஆறு நிலைகளைக் கடக்கின்றன.
தற்போது ஹய் பார்க்கில் உள்ள மரங்கள் இரண்டாம் நிலையில் (Stage 2) உள்ளன. அதாவது, மொட்டுகள் பெரிதாகி பச்சை நிற முனைகள் தெரியத் தொடங்கியுள்ளன.
இந்த மலர்கள் மிகவும் மென்மையானவை என்பதால், பலத்த காற்று அல்லது மழை பெய்தால் 3 முதல் 5 நாட்கள் மட்டுமே மரங்களில் நிலைத்திருக்கும்.
சாதகமான வானிலை நிலவினால் அதிகபட்சம் 10 நாட்கள் வரை இந்த அழகிய காட்சியைக் கண்டு ரசிக்க முடியும்.
றொரண்டோ வாசிகள் வசந்த காலத்தின் இந்த அடையாளத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.










