கனடாவின் (Canada Day) தேசிய தினத்தன்று ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட றொரண்டோ மிருகக்காட்சிச்சாலை (Toronto Zoo), வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஒன்டாரியோ (Southern Ontario) பகுதியில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையிலேயே இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
எனினும், விலங்குகளுக்கான பராமரிப்பு அமைப்புகள் தொடர்ந்து இயங்கியதால், அவை எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விலங்குகளின் நலனைக் கண்காணிக்க பிரத்யேக குழுக்கள் அங்கே நியமிக்கப்பட்டுள்ளன.
விலங்குகள் தங்குவதற்கு நிழலான இடங்கள், உட்புற வசதிகள், நீர்நிலைகள், பனித்துண்டுகள் (Ice treats), மின்விசிறிகள் மற்றும் மிஸ்டிங் (Misting) எனப்படும் நீர் தெளிப்பான் வசதிகள் மூலம் அவை தொடர்ந்து குளிர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளன.
வருகை தரும் பார்வையாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே மிருகக்காட்சிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாகவும், மின்சாரத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.










