றொரண்டோ (Toronto) நகரின் கிழக்கு பகுதியில் உள்ள RH McGregor Elementary School தொடக்கப் பள்ளியில், நூற்றுக்கணக்கான சிறுவர்களால் உருவாக்கப்பட்ட ‘பிரைட் கொடி’ (Pride flag) கடந்த வார இறுதியில் தீயிட்டு எரிக்கப்பட்டது.
ஜூன் மாத பிரைட் கொண்டாட்டங்களுக்காக, மழலையர் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இணைந்து, பள்ளியின் வேலி ஒன்றில் துணி துண்டுகளைக் கொண்டு இந்த வண்ணமயமான கொடியை உருவாக்கியிருந்தனர்.
ஜூலை 5 அன்று இக்கொடி எரிக்கப்பட்டு முற்றிலும் சாம்பலாக்கப்பட்டதை அறிந்த பள்ளி நிர்வாகமும், திட்ட ஒருங்கிணைப்பாளர் Jessica Thom போன்ற பெற்றோர்களும் பெரும் கவலையடைந்தனர்.
இது ஒரு வெறுப்புணர்வு நடவடிக்கை என வர்ணித்துள்ள Toronto பொலிஸார், இதனை வெறுப்புக் குற்றமாக (Hate Crime) கருதி விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த வன்மத்திற்குப் பயந்துவிடாமல் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள், எரிக்கப்பட்ட அதே இடத்தில் தங்களின் வீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட டஜன் கணக்கான வானவில் கொடிகளையும், அன்பை வெளிப்படுத்தும் வாசகங்களையும் ஒட்டி மீண்டும் ஒரு பெரிய கொடிப் பகுதியை உருவாக்கியுள்ளனர்.
மேலும், இப்பகுதியில் நிரந்தரமாக ஒரு வானவில் நடைபாதை (Rainbow crosswalk) அமைக்க வேண்டும் என மேயர் Olivia Chow மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து மனு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கு மேயர் Olivia Chow தார்மீக ஆதரவை வழங்கியுள்ளார்.










