மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, கனடாவில் எரிபொருள் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.
இதனால் Ride-share மற்றும் லொறி ஓட்டுநர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
Surrey, B.C. பகுதியைச் சேர்ந்த Kuljeet Singh போன்ற ஓட்டுநர்கள், ஒரு லீட்டர் பெற்றோல் விலை 1.70 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், வாழ்வாதாரத்தை முன்னெடுக்க வாரத்திற்கு 70 மணித்தியாலங்களுக்கும் மேல் உழைக்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
British Columbia மாகாணத்தில் ஒரு லீட்டர் பெற்றோல் சராசரியாக 1.72 டொலராகவும், Ontario இல் 1.50 டொலராகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, டீசல் விலை ஒரு லீட்டருக்கு 2.26 டொலராக அதிகரித்துள்ளதாக Richmond பகுதியைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் Ali Yemai தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துத் தடைகளே இந்த உலகளாவிய விலை மாற்றத்திற்குக் காரணம் என பொருளாதார நிபுணர் Viet Vu விளக்கியுள்ளார்.
இந்த பதற்றம் நீடித்தால், அல்பேர்ட்டா (Alberta) போன்ற மாகாணங்கள் உற்பத்தியை அதிகரித்து விலையை ஸ்திரப்படுத்த வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
