கனடாவின் பெரும் றொரண்டோ பகுதி (GTA) மற்றும் கியூபெக் (Quebec) மாகாணங்களில் இயங்கி வந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணச் சலவை கும்பலை பொலிஸார் முறியடித்துள்ளனர்.
றோயல் கனடிய மவுண்டட் பொலிஸார் (RCMP) கடந்த 18 மாதங்களாக மேற்கொண்ட “பாரிய மற்றும் சிக்கலான” விசாரணையின் பலனாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
றொரண்டோவைச் சேர்ந்த வேலரியா மசாஸ்-மொன்டானோ (Valeria Masas-Montano), குவோக் நுயென் (Quoc Nguyen) மற்றும் மிசிசாகாவைச் சேர்ந்த ஆஸ்டின் லே (Austin Le) உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கியூபெக்கைச் சேர்ந்த மூவரும் இதில் அடங்குவர்.
30-க்கும் மேற்பட்ட தேடுதல் கட்டளைகளின் மூலம் 153 கிலோ கிராம் கொக்கைன், 10 கிலோ கிராம் ஹெரோயின், மற்றும் 1.6 மில்லியன் டொலர் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 4.4 மில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கும்பலுடன் தொடர்புடைய அடையாளம் தெரியாத ஒரு நபர் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடி பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.
கூட்டுப் பொலிஸ் படையினரின் இந்த அதிரடி நடவடிக்கை, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் இலாபம் ஈட்டுபவர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
