நெடுஞ்சாலை 401-இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த ஒரு பாரிய விபத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவரே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 2:40 மணியளவில் Salem Road பகுதியில் பிக்கப் ட்ரக் ஒன்று தவறான திசையில் அதிவேகமாக வந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.
இதில் 38 வயதுடைய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிக்கப் ட்ரக்கை ஓட்டி வந்த 41 வயது நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
முதல் விபத்தை விசாரணை செய்துகொண்டிருந்தபோது, அதிகாலை 4:30 மணியளவில் மற்றொரு வாகனம் பாதுகாப்புத் தடைகளைத் தாண்டி பொலிஸ் வாகனத்தின் மீது மோதியது.
இதில் டர்ஹாம் (Durham) பிராந்தியத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 52 வயதுடைய ஓட்டுநர் காயமடைந்தனர்.
இரண்டாவது விபத்து குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIU) தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விபத்துக்கள் காரணமாக நெடுஞ்சாலை 401-இன் கிழக்கு நோக்கிய பாதைகள் பல மணிநேரம் மூடப்பட்டுக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
