அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதன் தாக்கமாக, பெரும் றொரண்டோ பகுதி (GTA) முழுவதும் எரிபொருள் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய Canadians for Affordable Energy அமைப்பின் தலைவர் டான் மெக்டேக் (Dan McTeague), வெள்ளிக்கிழமை முதல் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 5 காசுகள் உயர்ந்து 169.9 காசுகளாகவும், டீசல் விலை 13 காசுகள் உயர்ந்து 198.9 காசுகளாகவும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வார இறுதி நாட்களில் பெட்ரோல் விலை மேலும் 5 காசுகள் அல்லது அதற்கும் மேலாக உயரக்கூடும் என்பதால், வாகன சாரதிகள் வியாழக்கிழமையே தங்களது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் நாட்களில் ஒட்டுமொத்தமாக லீட்டருக்கு 10 முதல் 15 காசுகள் வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு 18 நாட்களே ஆன நிலையில், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை அடுத்து, இந்த ஒப்பந்தம் “முடிவுக்கு வந்துவிட்டது” என டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், இந்த புதிய பதற்றம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.










