கனடா, ஒன்டாரியோவின் (Ontario) போமன்வில் (Bowmanville) பகுதியில் மோஹ்சின் புய்யான் (Mohsin Bhuiyan) என்ற முஸ்லிம் நபர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அங்குள்ள தனது தோட்டத்தில் அவர் காய்கறிகள் பயிரிடுவதோடு, வாத்து மற்றும் கோழிகளையும் வளர்த்து வருகிறார்.
கடந்த நான்கு வாரங்களாக, அவரது தோட்டத்தில் விலங்குகள் வதைக்கப்படுவதாகவும், சட்டவிரோத இறைச்சி தயாரிப்பு நடப்பதாகவும் பேஸ்புக் (Facebook) பக்கங்களில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.
இந்த இணையவழி வதந்திகளால், அவரது வீட்டின் முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், ட்ரோன் (Drone) மூலமான கண்காணிப்புகள் மற்றும் கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன.
இதனால் தமது குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நகராட்சி மற்றும் மாகாண அதிகாரிகள் நடத்திய சோதனைகளில், அந்த தோட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயல்களோ, விதிமுறை மீறல்களோ கண்டறியப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் தேசிய முஸ்லிம் கவுன்சில் (National Council of Canadian Muslims – NCCM) மற்றும் கிளாரிங்டன் மேயர் ஏட்ரியன் போஸ்டர் (Adrian Foster) ஆகியோர் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வெறுப்புணர்வுக்கு இங்கு இடமில்லை எனக் கூறியுள்ள அவர்கள், டர்ஹாம் பிராந்திய பொலிஸார் (Durham Regional Police Service – DRPS) இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.










