கனடாவின் அவசர சிகிச்சை பிரிவுகளில் (Emergency Departments) நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பு – உண்மையான காரணங்கள் குறித்த புதிய அறிக்கை!

கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் (Canadian Institute for Health Information) புதிய அறிக்கையின்படி, 2024-25 ஆண்டுகளில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த 10-இல் ஒரு நோயாளி (சுமார் 1.5 மில்லியன் மக்கள்) 14 மணித்தியாலங்களுக்கும் மேலாகக் காத்திருந்துள்ளனர்.

அத்துடன், தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டிய 10-இல் ஒரு நோயாளி (சுமார் 180,000 மக்கள்), படுக்கை வசதி கிடைக்காமல் 48 மணித்தியாலங்களுக்கும் மேலாகக் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு சாதாரண நோயாளிகள் காரணம் அல்ல என்றும், மாறாக மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் (long-term care) மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளின் பற்றாக்குறையால் ஏற்படும் முடக்கமே (bottleneck) இதற்குக் காரணம் என ஆல்பர்ட்டா மருத்துவ சங்கத்தின் (Alberta Medical Association) மருத்துவர் பால் பார்க்ஸ் (Dr. Paul Parks) தெரிவித்துள்ளார்.

கல்கரி (Calgary) நகரின் றொக்கிவியூ ஜெனரல் மருத்துவமனையில் (Rockyview General Hospital) ப்ரெண்டா ட்ரொட்டியர் (Brenda Trottier) என்பவரது மகள் ஒடெஸா (Odessa) நீண்ட நேரம் காத்திருந்ததை அடுத்து, இந்த தாமதம் உயிருக்கு ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் எட்மன்டனின் கிரே நன்ஸ் சமூக மருத்துவமனையில் (Grey Nuns Community Hospital) பிரசாந்த் ஸ்ரீகுமார் (Prashant Sreekumar) மற்றும் றோயல் அலெக்ஸான்ட்ரா மருத்துவமனையில் (Royal Alexandra Hospital) டிராவிஸ் ஸ்மித் (Travis Smith) ஆகியோர் நீண்ட காத்திருப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் நோயாளிகளின் சிக்கலான உடல்நிலையே இதற்குக் காரணம் என ஆல்பர்ட்டா மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் மேடிசன் மெக்கீ (Maddison McKee) தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசு இதில் தலையிட்டு தேசிய அளவிலான தீர்வை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles