கனடாவிலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை’ (Tamil Genocide Remembrance Day) அனுஷ்டிப்பதாகக் கனடிய அரசு உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் தங்களின் உயிர்களை இழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றுவதுடன், இந்தத் துயரங்களைச் சுமந்து வாழும் குடும்பங்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுடன் கனடா என்றும் துணை நிற்கிறது.
வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புகலிடம் தேடி வந்த பெருமளவிலான தமிழ் மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய புலம்பெயர் தமிழ் சமூகங்களில் ஒன்றாகக் கனடா (Canada) விளங்குவதை அறிக்கை பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், கனடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியை ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக’ ஒருமனதாக அங்கீகரித்தது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களை ‘இனப்படுகொலை’ (Genocide) என ஏற்றுக்கொண்டமை, இந்த வேதனையான வரலாற்றை அங்கீகரிப்பதற்கான மிக முக்கியமான படியாகும்.
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நீதியைப் நிலைநாட்டுவதற்கும், நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கும் எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்குக் கனடா ஆதரவு தொடரும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித கண்ணியம் மற்றும் நீதிக்கான தங்களின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்துவதுடன், இத்தகைய கடுமையான மனித உரிமை மீறல்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்படவோ அல்லது மறக்கப்படவோ கூடாது என கனடிய அரசு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.










