கனடாவில் வசிக்கும் ஈரான் ஆட்சிக்குழு மற்றும் அதன் இராணுவப் பிரிவான IRGC உடன் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு “தீவிரமான” நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு நபர் மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் அணுகுமுறை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “எங்களிடம் முறையான மற்றும் நம்பகமான விசாரணை நடைமுறைகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.
இதுவரை IRGC உறுப்பினர் அந்தஸ்து காரணமாக 239 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், 32 பேர் கனடாவிற்குள் நுழையத் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்களில் 28 பேர் இன்னும் கனடாவில் உள்ளனர், ஒருவர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஈரான் பின்னணி கொண்ட கனடியர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் மற்றும் டொராண்டோவில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் கவலையளிப்பதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி (Conservatives) குற்றம் சாட்டியுள்ளது.
கனடா ஒரு “பாதுகாப்பான புகலிடமாக” மாறிவிடக் கூடாது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும், சட்ட ரீதியான நடைமுறைகளின் படியே நாடு கடத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் ஆனந்தசங்கரி வலியுறுத்தினார்.










