கனடாவில் சராசரியாக ஆண்டுக்கு ஒரு குழந்தை வெயில் காலத்தில் காரினுள் சிக்கி உயிரிழப்பதாக றொரண்டோவின் குழந்தைகளுக்கான மருத்துவமனை (Toronto’s Hospital for Sick Children) தெரிவித்துள்ளது.
முற்றிலும் தவிர்க்கக்கூடிய இந்த சோகம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பின் இருக்கையில் மறப்பதாலேயே பெரும்பாலும் நிகழ்கிறது.
வெப்பநிலை எவ்வளவு வேகமாக உயர்கிறது என்பதை அறிய CTV News நடத்திய சோதனையில், வெயிலில் நிறுத்தப்பட்ட ஒரு காரின் வெப்பநிலை வெறும் மூன்று மணித்தியாலங்களில் 21°C இலிருந்து 61°C ஆக உயர்ந்தமை கண்டறியப்பட்டது.
“பெரியவர்களை விட குழந்தைகளின் உடல் 3 முதல் 5 மடங்கு வேகமாக வெப்பமடையும்.
அதனால் ஜன்னல்களைத் திறந்து வைத்தாலும் அல்லது நிழலில் நிறுத்தினாலும் குழந்தைகளை காரில் தனியாக விடுவது பாதுகாப்பானது அல்ல” என நுகர்வோர் அறிக்கையின் (Consumer Reports) எமிலி தோமஸ் (Emily Thomas) எச்சரித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவில் ஆண்டுக்கு சராசரியாக 37 குழந்தைகள் இவ்வாறு உயிரிழக்கின்றனர்.
இதைத் தவிர்க்க, காரில் இருந்து இறங்கும்போது பின் இருக்கையைச் சரிபார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இதற்காக, உங்கள் பணப்பை அல்லது முக்கியமான பொருட்களைப் பின் இருக்கையில் வைக்கலாம்.
மேலும், குழந்தைகள் தாங்களாகவே காருக்குள் ஏறிப் பூட்டிக்கொள்வதைத் தடுக்க வாகனங்களை எப்போதும் பூட்டி வைக்குமாறும், செல்லப்பிராணிகளையும் இவ்வாறு மறக்கக் கூடாது என றொரண்டோ ஹியூமேன் சொசைட்டி (Toronto Humane Society) அறிவுறுத்தியுள்ளது.










